
புத்த மார்க்க வினா விடை-3
க. அயோதிதாஸ் பண்டிதர் எழுதியது.
01 . புத்தராகிய சற்குரு ஞான நீதிகளைப் போதித்து வந்தார் என்பதில் ஞானம் என்பதின் பொருள் என்ன?
ஞானம் என்பது அறிவு என்னும் பொருளைத் தரும். அஃது சிற்றறிவு என்றும் பேரறிவு என்றும் இரு வகைப்படும்.
02. சிற்றறிவு என்றும் பேரறிவு என்றும் இரு வகை அறிவுகள் உண்டோ?
உண்டு, அதாவது, சிறு வயதுள்ள மனிதன் என்றும் பேரு வயதுள்ள மனிதன் என்றும் தேகியை (தேகத்தை) குறிப்பது போல அறிவினிடத்திலும் விருத்தி பேதத்தால் இரு வகைகள் உண்டு.
03. சிற்றறிவு என்பது என்ன?
தங்கள் மனதை வீண் விஷயங்களில் செல்லவிடாமலும், தேகத்தைச் சோம்பல் அடையச்செய்யாமலும், உலோகங்களால் செய்யுங் கருவிகளையும், மரங்களால் செய்யுங் கருவிகளையும் கண்டுபிடித்து, உலகில் உள்ள சீவராசிகளுக்கு சுகம் உண்டாக்கி வைப்பது அல்லாமல், தங்களையும் தங்களை அடுத்தோர்களையும் குபேர சம்பத்தாக வாழ்விக்கச் செய்யும் ஓர்வகை உத்திக்கு சிற்றறிவு என்று கூறப்படும்.
04. அவ்வகை சிற்றறிவினால் கண்ட வித்தைகள் எவை?
பஞ்சை நூலகத் திரிப்பதும், நூலை ஆடையாக்குவதும், மண்ணிற் பலன் உண்டாக்குவதும், மண்ணை இரும்பாக மாற்றுவதும், இரும்பை இயந்திரங்களாக்குவதும், இயந்திரங்களால் புகைரதம், புகைகப்பல், மின்சாரதந்தி, மின்சார ரத முதலிய சூத்திரங்களை உண்டு செய்வதேயாம். இவ்வகை சிற்றறிவுடையவனை சூஸ்திரனென்றும், சூத்திரனென்றும் கூறப்படும். இதுவே விருத்தி ஞானமாம்.
05 பேரறிவு என்பது என்ன?
சீவராசிகளாகக் தோன்றும் யாவும் அநித்தியம் (நிலையற்றது) என்று அறிந்து மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய முப்புரங்களையும் அறிந்து எல்லாக் கவலையும் அற்று இருப்பதை பேரறிவு என்றும் சொருப ஞானம் என்றும் உண்மை என்றும் கூறப்படும்.
06 இவ்வகை பேரறிவினால் உலகில் உள்ளோருக்கும் தனக்கும் உண்டாகும் பயன் என்ன?
தனக்கு உண்டாகும் பிறப்பு, பிணி. மூப்பு, மரணம் என்னும் நான்கு வகைத் துக்கங்களை ஜெபித்துக்கொள்வது அல்லாமல் தன்னை அடுத்தவர்களுக்கும் சுகவழியைப் போதிப்பான். இவ்வகை பேரறிவாளனை வடமொழியில் பிராமணன் என்றும் தென்மொழியில் அந்தணன் என்றும் கூறப்படும்.
07 அஞ்ஞனம் என்பது என்ன?
அஞ்ஞனம் என்பது அறிவின் விருத்தி இல்லாமல் என்று கூறப்படும். அதாவது தன்னுடைய அறிவினால் ஒன்றை விசாரித்து தெளியாமல் ஒருவன் சொல்லுவதை நம்பிக்கொண்டு பேசுவது, ஒருவன் எழுதி வைத்திருப்பதை நம்பிநடப்பது ஆகிய செய்கைகளை அஞ்ஞனம் எனபபடும்.
08 உலகத்தில் எழுதிவைத்திருக்கும் வேதங்களும் புராணங்களும் அவற்றின் போதனைகளும் அஞ்ஞனம் ஆகுமோ?
அவைகளை வாசித்த நிலையிலும், கேட்ட நிலையிலும் நிற்பது, கற்கண்டு என்று எழுதியிருப்பதையும் கற்கண்டு என்று போதித்த வார்த்தையும் கேட்டுக்கொண்டு அதை விசாரியாமலும், சிந்தியாமலும், கற்கண்டு கற்கண்டேன்னும் பொருகளை எல்லோரும் காணக்கூடியதாய் இருந்தாலும் அதின் இனிப்பாகிய சுவையை ஒவ்வொருத்தனும் சுவைத்தறிந்துக் கொள்ளக் கூடியவனாக இருக்கிறான்.
09. மெஞ்ஞானம் என்பது என்ன?
வாசித்தவைகளையும், கேட்டவைகளையும் சிந்தித்து தெளிவடைதலும் கற்கண்டு என்பவை எதிலிருந்து உற்பத்தியாகிறது? அதின் நிறம் ஏத்தகையது? அதின் சுவை ஏத்தகையது? என்று தேடி வாசரித்து சுவைத்து அறிந்த நிலையே மெஞ்ஞானம் எனப்படும்.
10. புத்தர் மரணம் அடைந்தார் என்றும், புத்தர் நிருவாணம் அடைந்தார் என்றும் கூறும் படியான இருவகை வார்த்தைகளின் பேதம் என்ன?
துன்பத்திற்கு இன்பம் எதிரிடையாகவும், துக்கத்திற்கு சுகம் எதிரிடையாகவும் இருப்பது போல, மரணத்திற்கு நிருவாணம் எதிரிடையாயிருக்கின்றது. எக்காலத்தும் நித்திரையில்லாமல் விழித்திருப்பவனை போலும், இரவென்பது இல்லாமல் பகலவனாய் இருப்பது போலும், பிறவியை நீக்கி நித்திய ஜீவனானவர்களுக்கு நிருவாணம் அடைந்தோர் என்றும், தேகத்தில் நோய்க்கண்டு பலவகைத் துன்பங்களால் கபமீறி சுவாசம் அடைக்குங்கால் பொருளின் பேரிலும், பெண்சாதி பிள்ளைகள் பெயரிலும் இருக்கும் பாசம் இழுத்து, பெரு நித்திரை உண்டாக்கி அநித்திய சிவனையடைந்து பிறவியின் ஆளானோர்களை மரணம் அடைந்தார் என்றும் கூறப்படும். ஆசாபாச பற்றுகளில் அழுந்தி மரணமடைந்தோர்களுக்கு பிறவியின் துன்பமும், ஆசாபாசங்கள் அற்று நிர்வாணமடைதோர்களுக்குப் பிறவியற்ற இன்பமும் உண்டாம்.
11. நிருவாணம் என்பது என்ன?
பொய்மை ஆகிய தேகத்திக்பேரில் அணைந்துள்ள வஸ்திரங்கள் எல்லாவற்றையும் கழற்றி எறிந்து விடுவதை தேக நிருவாணம் என்றும்; பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்று மனதில் அணைந்துக் கொண்டிருக்கும் பற்றுக்களை கழற்றி எறிந்துவிட்டு உண்மையாகிய ஒளியுற்றலை நிருவாண நிலை என்றும், அந்தர நிர்வாணம் என்றும், எல்லோரும் தரிசிக்க உண்மை ஜோதி வானோக்கி எழுதலை மகா பரிநிர்வாணம் என்றும் கூறப்படும். (ஆசை என்னும் இளமையிலிருந்து ஆசையற்று முத்தினான், முத்திபெற்றான், கடைத்தேறினான், மோக்கமுற்றான் நிருவாணமடைந்தான் என்று வழங்கி வருகிறார்கள்) இவ்வகையான சுகவழியை ஆதியில் போதித்தவுரம், அதின் அனுபவமாகிய சுகமுக்தியைக் காண்பித்தவரும், சற்குருவான புத்தராகையால் அவர் போதித்த சுயக்கியான வழியினின்று நிருவாணமுற்ற பின் அடியார்களை ஆதிக்க சமமானவர்கள் என்றும், சமஆதியானார்கள் என்றும், சமாதியானார்கள் என்றும் வழங்கி வருகிறார்கள்.
12. தன்னிற்றானே உண்மை அறிந்து சுகமடைய வேண்டுமேயல்லது பிறரால் யீடேற்றம் உண்டாவதில்லை என்னும் சுயக்கியானத்தைப் போதித்த புத்தரவர்கள் இவ்வுலகத்தில் எத்தனை வருடமிருந்தார்?
சாக்கிய சக்கரவர்த்தி திருமகனாக பிறந்து பதினாறாவது வயதில் அசோதரை என்னும் மலையசன் புத்திரியை விவாகம் செய்து, இருபதாவது வயதில் இராகுலன் என்னும் ஓர் புத்திரனைப் பெற்று, இருபத்தியோராவது வயதில் அரசாங்கத்தையும் தனது பந்துமித்திரரையும் விட்டு அரச மரத்தடியில் நிலைத்து தன்னையறிந்து காமமென்னும் மன்மதனையுங் காலனென்னும் மரணத்தையுங் செயித்து, முப்பதாவது வயதில் உண்மையின்று உலகேங்கும் சுற்றி சுயக்கியான சங்கங்களை ஏற்படுத்தி ஜீவகாருண்ய வாழ்க்கையையிருத்தி விட்டு, எண்பத்தைந்தாவது வயதில் காசியில் கங்கைக்கரை என்று வழங்கும் பேரியாற்றங்கரை பல்லவ நாட்டில் சோதிமயமாக எல்லோரும் தரிசிக்கும்படி நிருவாண திசையடைந்தார்.
13. பிறவி என்பது என்ன?
அணுவிலும் சிறிய சீவராசிகள் கண்களுக்குத் தோன்றும் உருவமாக எழும்புவதைப் பிறப்புபென்றும், அந்த தோற்ற உருவம் அழிந்துவிடுவதை இறப்பென்றும் கூறப்படும். இதில் கண்களுக்கு தோன்றும் தேகத்திற்கு பொய்மையென்றும், அதை தோற்றிவிக்கும் சத்துக்கு உண்மையென்றும், இருவகைகள் உண்டு. இவற்றுள் தேகத்தை தானென்று அபிமானித்திருக்கும் வரையில் பிறவியென்னும் துக்க சக்கரத்தில் சுழன்று திரிவான். தேகத்தை தானல்லவென்று நீக்கி உண்மையாகிய தன்னையறிந்தவன் பிறவியென்னும் துக்க சக்கரத்தை விடுவித்துக் கொள்ளுவது மல்லாமல் தேகனென்று சொல்லும் வார்த்தை நீங்கி தேவனென்று சொல்லும் மேன்மையடைவான்.
14 சிலர் தன் முயற்சியினால் சுகம்பெரும் வழிகளை நம்பாமல் மணி மாலைகளைக் கொண்டு ஜெபித்திருப்பது என்ன?
ஒரு வசனத்தை பலமுறை சொல்வதே ஜெபமாகும். அவற்றுள் எண் வழுவாமல் காக்க மணிமாலையை சுழற்றுவதன்றி மற்றியாதும் இதில் பயனில்லை.
15. கடவுளை வழிபடுவது என்றால் என்ன?
அவர் உலகில் பிறந்து நமக்கு அருளிய நியாயங்களில் நாம் நின்றோழுகுவதே கடவுளை வழிபடுவதேயாகும்.
16 கடவுளை மாத்திரம் நம்பிக்கொண்டு முக்திபெற முடியாதோ?
கடவுள் என்பதற்கு நன்மெய் என்ற பொருளிருக்க அம்மொழியை மட்டும் விசுவாசித்து வாக்கு, மனம், காயத்தால் தீயச்செய்கையில் நிலைப்பவர்க்கு முக்தியே இல்லை.
17 அறிவே ஆனந்தம் எனபதென்ன?
அறிவால் சர்வமும் உணர்ந்து புண்ணியத்தைக் கைக்கொள்வது மக்களின் முதற் பேறாகும் இதனை அறிவின் மயமென்றும் சொல்லப்படும்.
18 . இவைகளை வகுத்தார் யார்?
ஆதியங் கடவுளாகிய சாக்கைய புத்த சுவாமியே.
19 . இவ்வகை பேரானந்த ஞானங்களைப் போதித்த சற்குரு நிருவாண திசையடைந்து எத்தனை வருடமாகிறது?
இந்தகலியுகம் 5057 மன்மத - சித்திரை மாதம் ( மே 1955 ) பௌர்ணமி திதி வரையில் 2499 வருடமாகிறது. (தற்போது சித்திரை மாதம் மே 2011 பௌர்ணமி திதி வரையில் 2555 வருடமாகிறது)
20 . புத்தர் போதித்துள்ள அட்டாங்க மார்க்கத்தில் மனதையடக்க மந்திரங்கள் ஏதேனும் உண்டோ?
உண்டு. மந்திரம் என்பதற்கு ஆலோசித்தல் என்னும் பொருளை தரும் அதாவது, மனமென்னும் சத்துவிழிப்பில் எங்கிருந்து உதிர்கின்றன, நித்திரையில் எங்கு அடங்கின்றன, சொப்பனத்தில் எங்கு விரிகின்றன வென்று ஆலோசித்தல் மந்திரம் எனப்படும்.
21 . மனம் அடங்குவதற்கு தியானமாகிலும் ஏதேனும் உண்டோ?
உண்டு. தியானம் என்பதற்கு கியானம், ஞானமென்னும் பொருளைத் தரும், அதாவது மனதைப் பேராசையிற் செல்லவிடாமலும், பொறமையில் சூழவிடாமலும், வஞ்சினத்தில் நிலைக்கவிடாமலும், காம இச்சையில் விழவிடாமலும், ஜாக்கிரதையாக ஆண்டுவரும் அறிவுக்கு தியானம் எனப்படும்.
22 . மனம் அடங்குவதற்குப் பூசைகள் ஏதேனும் உண்டோ?
இல்லை. பூசையென்பதும், பூசனையென்பதும், பூசலென்பதும் தேகத்தை தடவலென்னும் பொருளைத்தரும். அதாவது கல்வியை கற்பிக்கும் குருவையானாலும், கை தொழிலை கற்பிக்கும் குருவையானாலும், ஞானத்தை போதிக்கும் குருவையானாலும் நெருங்கி அவருடைய கை, கால் முதலிய அவயங்களைப் பிடித்தலுக்கு பூசதலென்று பெயர். இவ்வகை பூசைக்கும் மனதுக்கும் யாதொரு சம்பந்தமில்லை.
23 . அருகமதம் வேறு, புத்த மதம் வேறென்று கூறுகின்றார்களே அதின் விவரம் என்ன?
வட தேசங்களில் உள்ளவர்கள் புத்தரென்றும், தென் தேசங்களில் உள்ளவர்கள் அருகரென்றும் (பல காரியத்திலும் நானகருனல்ல என்றும்) வழங்கி வருகின்றார்கள்.
24 . சமணமதம் என்பது என்ன?
புத்த தருமத்தை அனுசரித்து சங்கங்களில் சேர்ந்து மடத்தில் வாழ்கிறவர்கள் சகல சீவராசிகளின் பேரிலும் அன்புவைத்து சமமனமுண்டாகி வாழ்ந்தவர்கள் ஆகையால் சமனர் என்றும் சமணாள் என்றும் அழைக்கப்பெற்றார்கள்.
25 . சமணர்களை கழுவேற்றி விட்டதாக சொல்லுகின்றார்களே அதின் விவரம் என்ன?
வேட பிராமணர்கள் தங்கள் சீவனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மதங்களை உறுதி செய்துக் கொள்ளுவதற்கு சிற்றரசர்களையும் பெருங்குடிகளையுங் தங்கள் வயப்படுத்திக் கொண்டு புத்த தருமத்தை அனுசரித்து வந்தவர்களைக் கழுவிலேற்றிக் கொன்றதுமல்லாமல் பலவகை துன்பங்களையும் செய்து வந்தார்கள்.
26 . வேடபிராமணர்கள் இந்தியாவில் மாத்திரமா பௌத்தர்களை கழுவிலேற்றி வதைத்தார்கள் ஏனைய கண்டங்கட்கு போகவில்லையா?
எல்லா கண்டங்கட்கும் குடியேறி அக்கண்டங்களில் சிறந்து விளங்கிய சமணர்களையும் அவர்களை ஆதரித்து வந்தவர்களையும் கழுவிலும், மரத்திலும் கொன்று வேதங்கட்கு சுதந்திரம் பெற்று அவ்வக் கண்டத்தார்களைப் போலவே நிற்கின்றார்கள்.
27 . கழுவிலேற்றி கொன்ற சமணர்கள் நீங்கலாக மற்றவர்கள் எங்கு போய்விட்டார்கள்?
சற்குருவின் அருளினால் வேறு வேறு மதத்தவர்களாகிய அரசர்கள் இத்தேசத்தை வந்து கைபற்றிக்கொண்ட படியால் சமணர்களையும் அவர்களை சார்ந்தவர்களையுங் கொல்லுவதற்கு ஏதுமில்லாமல் பறையர் பறையரென்று தாழ்த்தி வஞ்சிளமென்னுங் கழுவிலேற்றி வதைத்து வருகின்றனர்.
28 . ஜைன மாதம் என்பது என்ன?
புத்தருடைய ஆயிர நாமங்களில் ஜைரரென்னும் பெயரும் அடங்கியிருக்கின்றன. அப்பெயரை வகுத்திக்குங் கூட்டத்தார் புத்த தருமத்திற்கு சிலவற்றையும் வேட பிராமணர்கள் ஏற்படுத்தியிருக்கும் மதக்கட்டுப்பாடுகளிற் சிலவற்றையும் அனுசரித்துக்கொண்டு ஜைத மதத்தரென வழங்கி வருகிறார்கள்.
29 . சின்னசாமி என்ற பெயரும் அதற்கெதிர் பெரியசாமி என்ற பெயரும் பௌத்தர்கள் வழங்குவதின் காரணம் என்ன?
தமிழ்மொழில் (ஜினசாமி) யாகிய புத்தரை சினசாமி சின்னசாமி சின்னச்சாமி என்றும் சாமிகட்கெல்லாம் முதலுமதிகாரியு மானதால் மகாசாமி என்றும் பெரியசாமி என்றும் வழங்குகிறார்கள். இதன் அர்த்தமுணராதார் சாமியில் சின்னதும் பெரியதும் உண்டோ என்று கேழ்க்கிறார்கள்.
வியாழன், ஜூன் 02, 2011
புத்த மார்க்க வினா விடை-2
க. அயோதிதாஸ் பண்டிதர் எழுதியது
புத்த சுவாமி விவரம்
16. தற்காலத்திய வள்ளுவர்கள் ஆகிய சாக்கியர்கள் தங்கள் தெய்வத்தை மறவாது இருக்கின்றார்களா?
17. தற்காலம் வள்ளுவர்களும் பறையர்களும் சம்மந்தப்பட்டு இருக்கிறர்களா?
ஆம். வள்ளுவர்களைக்கொண்டே பறையர்கள் சகல காரியங்களையும் நடத்துகிறார்கள். பறையர்களுக்கு வள்ளுவர்கள் சகல உபகாரங்களையும் செய்து வருகின்றார்கள். ஆகவே பறையர்களுக்கு வள்ளுவர்களும், வள்ளுவர்களுக்கு பறையர்களும் சம்மந்தப்பட்டு இருக்கிறர்கள். நாளிது வரையிலும் பறையர் வள்ளுவர்களைத்தான் "ஐயர்" என்று வழங்குகிறார்கள்.
18. சக்கையர்கள் இவ்வகையாகத் தாழ்த்தப்பட்டு நிலை குலைவதற்கு முகாந்திரம் என்ன?
அன்னிய தேசங்களில் இருந்து இவ்விடம் வந்து குடியேறிய சில சாதியார் தாங்கள் சுய சீவனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மதக்கோட்பாடுகளுக்கும், புத்தருடைய ஞானநீதிகள் பெரிதும் நேர்விரோதமாய் இருந்தபடியால் புத்த மதத்தை நசித்துவிடவேண்டும் என்னும் கேட்ட எண்ணங்கொண்டு அம்மதத்தைச் சார்ந்து சுத்தசீலத்தில் மேன்மைப் பெற்றிருந்த சாக்கையர்கள் பறையர் என்றும் கீழ்சாதிகள் என்றும் வகுத்து சகல விஷயங்களிலும் தலை எடுக்க விடாமல் நசித்து வருகிறார்கள்.
19. பறையர் என்று வழங்கும்படியானக் கூட்டத்தார் பூர்வ காலத்தில் கல்வியிலும் நாகரிகத்திலும் ஒழுக்கத்திலும் மேன்மை பெற்று இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன?
திருக்குறள், ஞானகுறள், மூதுரை, ஞானவெட்டி, ஞானமதியுள்ளான் சிவவாக்கிய முதலிய நூற்கள் இயற்றி இருக்கும் விவேக முதிர்ச்சியினாலும் சோதிட நூற்களையும், வைத்திய நூற்களையும், ஞான நூற்களையும் பரம்பரையாகத் தங்கள் இருப்பில் வைத்திருந்து தற்காலம் அச்சிட்டு வெளிக்கு கொண்டுவந்த மகத்துவத்தினாலும் கணிதத்திலும் வைதியத்திலும் வித்துவத்திலும் மாறாமல் விருத்தி பெற்றுவரும் அனுபவங்களிலும் இக்குலத்தார் பூர்வ காலத்தில் சிறப்புற்று இருந்தவர்கள் என்பதையும், தற்காலத்திலும் இக்குலத்திலேயே வித்துவான்கள், புலவர் முதலிய சிரோஷ்டர்கள் அதிகரித்திருபதினாலுமே எளிதில் அறிந்துக்கொள்ளலாம்.
20. பறையர் என்று வழங்கும்படி ஆனவர்கள் பூர்வ சக்கிரவர்த்திகளின் வம்ச வரிசையைச் சார்ந்தவர்கள் என்பதற்கு அனுபவ ஆதாரம் என்ன?
சாக்கையர்கள் அன்னிய மதத்தவர்களால் நசுங்குண்டு நிலைகுலைந்து இருந்த போதிலும் தங்கள் விவாக காலங்களில் தலைப்பாகை, நெற்றிச்சுட்டி, அங்கி, நடுக்காட்டு, கேடயம், மார்பதக்கம், வெள்ளைக்குதிரை, வெள்ளைக்குடை, செடி முதலிய பதினெட்டு விருதுக்களுடன் கோலம் வந்து மூகூர்த்தம் நடத்திவரும் அனுபவங்களும் போதுமான ஆதாரமாய் இருக்கின்றது.
21. இன்னமும் இக்குலத்தார் பூர்வ சக்ரவர்த்திகளின் வம்சத்தார் என்பதற்கு ஆதாரம் ஏதும் உண்டோ?
உண்டு, பறையர்கள் மரணகாலங்களில் சவத்திற்கு முன் உயிர் விட்டவன் ஆயுதங்களாம் வாள், கொடி, குடை, கத்தி, முதலியவைகளை ஓர் கொம்பில் கட்டி, மகமேரு என்று தூக்கி வருவதாலும் இக்குலத்தோர் சக்கரவர்த்திகள் என்பதற்கும், மகமேரு மந்திரபிரானாகிய சாக்கைய புத்த பகவான் குலத்தார் என்பதற்கும் சந்தேகமே இல்லை.
22. இவர்கள் வாழும் கிராமங்களுக்கு பெரும்பாலும் சேரி என்று வழங்கி வரும் காரணம் என்ன?
சேர்ந்து வாழும் இடங்களுக்கு சேரி என்று பொருள்படும். இக்கருத்துப் பற்றியே பூர்வ புத்தமத அரசர்கள் வாழ்ந்த இடங்கட்கு சேரி என்று வழங்கி வந்தார்கள். அக்குலத்தைச் சார்ந்த இவர்கள் நாளிது வரையிலும் தாங்கள் வாழும் இடங்களுக்கு சேரி என்றே வழங்குகிறார்கள். இவற்றை ஜீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மேருமந்திர புராணம், சூளாமணி முதலிய காவியங்களில் காணாலாம்.
23. சக்கையகுல சக்கிரவர்த்தியின் வம்ச வரிசையில் பிறந்து உலகு எங்கும் சுற்றி ஞானநீதிகளைப் போதித்து வந்தார் என்பதற்கு ஆதாரம் என்ன?
தற்காலம் உலகத்தில் உள்ள பல திக்குகளிலும் பூமிக்குள் புதைந்து இருக்கும் புத்தரைப்போன்று விக்கிரகங்களும் உலகம் முழுவதும் உள்ள மனுக்களின் மொத்தத்தொகையில் அரையே அரைக்கால் பாகம் புத்த மதத்தவர்கள் இருக்கும் பெரும் தொகையும் அதற்க்கு போதுமான ஆதாரமாய் இருக்கின்றது.
24. அவ்வகை பெருந்தொகை உள்ள புத்த மதத்தவர்கள் எங்கு இருக்கின்றாகள்?
தீபெத், சீனம், பர்மா, ஜப்பான், சையாம், சிலோன், நேபால் முதலிய தேசத்தோர்கள் புத்த மதத்தவர்களாக இருப்பது அல்லாமல் ஆங்கிலேயர், அமெரிக்கர், ஜெர்மனியர், முதலியோர்களில் கல்வியில் சிறப்புற்ற அநேகர் புத்த மதத்தை தழுவி இருக்கின்கிறார்கள்.
25. புத்தர் உலகெங்கும் சுற்றி போதித்து வந்த ஞானநீதிகளால் உண்டான பலன் என்ன?
புத்த மதத்தவர்கள் வாழும் தேசங்களின் சிறப்பும் அவர்களுடைய ஒற்றுமையும் சமாதானமும் ஆறுதலும் இதற்கு பலனாகும்.
செவ்வாய், மே 31, 2011
புத்த மார்க்க வின விடை -1
க. அயோத்திதாஸ் பண்டிதர் எழுதியது
புத்த சுவாமி விவரம்
01. உமது மார்க்கம் என்ன?
புத்த மார்க்கம்
02. புத்த மார்க்கம் என்பது எப்படி?
புத்தராகிய சற்குரு ஜகத் ஜோதியாய் தன்னருட் கொண்டு நிர்வாண பெரும்பாட்டையைத் திறந்து அவ்வழியில் தானே முதல் முதல் சென்றதால் அவ்வழிக்கு புத்த மார்க்கம் எனப்படும்.
03. புத்தகம் என்பது என்ன?
புத்தருடைய நீதிவாக்கியங்களையும் ஞானவாக்கியங்களையும் எழுதி அடக்கி வைத்திருக்குங் கட்டுக்கு புத்தகம் என்று பெயர்.
04. பௌத்தர் என்பது என்ன?
புத்தர் அறத்தைக் கடைப்பித்தவர்கட்கு பௌத்தர் என்றும் புத்தறர் என்றும் பெயர்.
05. புத்தர் என்பவர் யார்?
நம்மை ஒத்த மனிதனாக பூமியில் பிறந்து அறிவை விருத்தி செய்துக்கொண்டு உலகத்தில் உள்ள சீவராசிகளுக்கு ஞானம் இன்னது என்றும் அஞ்ஞானம் இன்னது என்றும் விளக்கி சுக வழியைக் காட்டிய ஓர் சற்குரு.
06. இம்மகாத்துமா புத்தர் என்னும் காரண நாமதேயத்தைச் சூடாமுன் என்ன பெயரைக் கொண்டு அழைக்கப்பெற்றார்?
சித்தார்த்தர் என்று அழைக்கப்பெற்றார்.
07. இவருக்கு சித்தார்த்தர் என்னும் பெயரை ஏன் கொடுத்தார்கள்?
பூர்வ காலத்தில் இத்தேசத்தை அரசாண்ட முக்கிய அரசர்களுட்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தால் கலிவாகு சக்கிரவர்த்தி கணித்த அறுபது வருடத்தில் பிறந்த வருடத்தையே நாமகரணமிடும் வழக்கப்படி சித்தார்த்தி வருடம் பிறந்த புத்த சுவாமிக்கும் சித்தார்த்தா என்று அழைக்கப்பெற்றார்.
08. புத்த சுவாமியைப் போல முக்கிய அரசர்கள் இவ்வருட நாமத்தை வழங்கினார்களா?
ஆம். நளவருடம் பிறந்தவனை நளராசன் என்றும் விக்கிரம வருடம் பிறந்தவனை விக்கிரமராசன் என்றும் மன்மத வருடம் பிறந்தவனை மன்மதராசன் என்றும் ஐயவருடம் பிறந்தவனை ஐயராசன் என்றும் வழங்கி வந்தார்கள்.
09. இவ்வகை சித்தார்த்தி என்னும் பெயரை மாற்றி புத்தர் என்னும் பெயரால் அழைக்கும்படி நேரிட்ட காரணம் என்ன?
இவர் ஓர் சக்கிரவர்த்திக்கு ஏகபுத்திரனாகப் பிறந்து மண் என்றும் பெண் என்றும் பொன் என்றும் வழங்கும் செல்வத்திரள் தனது சுகபோகத்துக்குத் தக்கவாறு இருந்தும் உலகிலுள்ள சீவராசிகளை ஈடேற்ற வேண்டும் என்னும் கருணையினால் அவைகள் யாவற்றையும் துறந்து பலவகையான துன்பங்களை சகித்து சுகவழியாகிய ஞானத்தின் உண்மெய்க் கண்டு போதித்ததால் மெய்யன் என்னும் பொருட்பட பாலி கலையில் (புத்தம்) புத்தா என்று அழைக்கப்பெற்றார்.
10. இவர் எந்த சக்கிரவர்த்திக் குடும்பத்தில் பிறந்தார்?
சாக்கைய குலத்தைச் சார்ந்த வீரவாகு என்னும் சக்கரவர்த்தியின் வம்ச வரிசையில் சுத்தோதயன் அல்லது மணமுகன் என்று வழங்கும் சக்கரவர்த்திக்கும் மாயாதேவி என்னும் சக்கரவர்த்தினிக்கும் பிறந்தவர்.
11. இவர் தந்தை எந்த தேசத்தை அரசாண்டு வந்தார்?
மகத நாட்டை சார்ந்த கபிலவசத்து என்னும் பட்டணத்தை அரசாண்டு வந்தார்.
12. தற்காலத்தில் அத்தேசம் எங்குள்ளது?
நேபாளத்தில் இருக்கின்றது. அதனை வட அயோத்தியாபுரி, சாக்கிய நகர், கயிலாசம், உத்தர கோசலம் என்றும் சரித்திரங்களில் எழுதி இருக்கின்றார்கள்.
13. சாக்கையர்கள் என்றால் என்ன?
பூர்வகாலத்தில் கிரகங்களைக் கொண்டு வருங்காலம் போங்காலங்களை அறிந்து சொல்லக்கூடிய மேன்மையுள்ள ஓர் கூட்டத்தாருக்கு சாக்கையர், வள்ளுவர், நிமித்தகர், தீர்க்காதரிசி வருங்காலம் உரைப்போர் என்றும் வழங்கி வந்தார்கள்.
14. இவ்வகை சக்கையர் குடும்பத்தில் புத்தர் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் என்ன?
அவருடைய சரித்திரங்களும் சாக்கையமுனி என்னும் பெயரும் போதுமான ஆதாரமாக இருக்கின்றது.
15. சாக்கையர் என்று வழங்கும் புத்தருடைய குடும்பத்தார் தற்காலம் எங்கு இருக்கின்றனர்?
பூர்வகாலத்து அரசர், வணிகர், வேளாளர் என்ற முத்தொழிலாளர்களாலும் சிறப்புற்று இருந்த சாக்கையர்கள் தற்காலம் பறையர் என்றும், பஞ்சமர் என்றும், சாம்பார் என்றும், வலங்கையர் என்றும் தாழ்த்தப்பட்டு நிலைகுலைந்து இருகின்றனர்.
வெள்ளி, பிப்ரவரி 25, 2011
பணம் சேர்க்கும் சுவாமி விவரம்
அயோத்திதாசர் சிந்தனைகள்
சமயம், இலக்கியம் - தொகுப்பு II
தொகுப்பாசிரியர் - திரு ஞான அலாசியஸ்
தந்திர சாமிகளின் செய்கைகளை மந்திர சமிகளாம் பௌத்தர்கள் விளக்கிக் கொண்டு வந்தபடியால் அவர்களை பல வகையாலும் கொல்லவும் பறையர்கள் என்று சொல்லவும் நேர்ந்தது.
இதன் பகரமாய் பௌத்த தன்மம் இத்தேச முழுவதும் நிறைந்திருந்த காலத்தில் சில வேஷ பிராமணர்கள் கூடி ஓர் பேதை அரசனை அணுகி அரசே நாங்கள் விசேஷ யாகம் செய்யப் போகிறோம். அதில் தங்களிடம் உள்ள பொன் ஆபரணம் யாவையும் அணிந்துக் கொண்டு நாங்கள் பூசிக்கும் யாக குண்டலத்தில் குதிப்பீர் ஆனால், அணிந்துள்ள ஆடை
ஆபரணங்களுடன் தெய்வலோகம் சென்று ஆரம்பாஸ்தீரிகள் யோகம் அனுபவிப்பீர் என்றார்கள்.
அதைக் கேட்ட அரசன் அவர்கள் வாக்கை தெய்வவாக்கு என நம்பி தன்னிடம் உள்ள பொன் ஆபரணம் இரத்தின ஆபரணம் யாவையும் அணிந்துகொண்டு யாக குண்டத்தில் அருகில் வந்து சேர்ந்தான்.
அதே காலத்தில் ஓர் பௌத்த குருவும் அவ்வழியே வந்து யாக குண்டம் எரிவதையும் அரசன் அருகினில் நிற்பதையும் கண்டு அரசே யாது செய்கிறீர்கள் என்றார்.
பௌத்த குருவே, நான் யாக குண்டலத்தில் குதித்து தெய்வலோகத்திற்குப் போகின்றான். அதைக் கேட்ட பௌத்தகுரு அரசே தெய்வலோகத்திற்குப் போகும் வழிகள் யாவும் உமக்கு நன்றாய் தெரியுமா என்றார்.
பௌத்த குருவே, நான் கண்டதில்லை என்றான். அரசே, உம்மை தெய்வலோகம் போவதற்கு யாக குண்டலத்தில் குதிக்க சொன்னவர்கள் யார் என்றார்.
பௌத்த குருவே, இதோ எதிரில் மந்திரம் செய்து கொண்டிருக்கும் பிரமணர்களே சொன்னார்கள் என்றான்.
அரசே, அப்படியானால் அந்த பிரமணர்களை முதலில் யாக குண்டலத்தில் குதிக்கச் செய்து நீர் பின்பு குதிப்பீர் ஆனால் அவர்கள் முன்பு தெய்வலோகத்தின் வழிகளை காட்டிக்கொண்டே சென்று உம்மை அவ்விடம் விட்டு அவர்கள் இவ்விடம் வந்து சேர்ந்து விடுவார்கள். நீங்களும் சுக யோகத்தில் இருக்கலாம் என்றார்.
அதைக் கேட்ட அரசன் நமக்கும் தெய்வலோகத்து வழி தெரியாது. பிராமணர்கள் முன்பு வழிகாட்டிக் கொண்டு நடப்பது நன்று என்று பிரமணர்களை அழைத்து சாமிகளே தாங்கள் முதலில் யாக குண்டத்தில் குதிப்பீர் ஆனால் நானும் கூடவே
குதிக்கிறேன். என்னை நீங்கள் கூட்டிக்கொண்டு
தெய்வலோகத்தைக் காட்டிவிட்டு இவ்விடம் வந்துவிடலாம் என்றான்.
இதைக் கேட்ட வேஷ பிராமணர்கள் ஆ ஆ இன்று கிடைக்கக் கூடிய இலக்ஷ பொன்னுக்கு மேற்ப்பட்ட ஆபரணங்கள் போய்விட்டது என்று வருந்தி இப் பௌத்த பிக்குவே கெடுத்துவிட்டான் என்று எண்ணி ஏ அரசே, நீர் நீச்சனை அணுகி, நீச்ச வார்த்தைகளைக் கேட்டு நீயும் நீச்சனாகி விட்டீர். ஆதலின் உமக்கு தெய்வலோக சுகம் கிடைக்காமல் போய்விட்டது. போம் போம் என்று கூறி குடிமியை தட்டிக் கொண்டே போய்விட்டார்களாம்.
பக்கம் 98 -99
No comments:
Post a Comment